கொலை செய்யும் முன் பெண்ணை மிரட்டி தற்கொலைக் கடிதம் எழுத வைத்த குற்றவாளி
பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை செய்த நபர், அவரைக் கொல்லும் முன், மிரட்டி தற்கொலைக் கடிதம் எழுத வைத்தச் சம்பவம்
தாணே: பணப் பிரச்னையால், பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை செய்த நபர், அவரைக் கொல்லும் முன், மிரட்டி தற்கொலைக் கடிதம் எழுத வைத்தச் சம்பவம் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் மும்பையின் கஞ்ஜுர்மார்க் பகுதியைச் சேர்ந்த 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவி மும்பையின் கான்சோலி பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், அக்டோபர் 21ஆம் தேதி தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தார். அவர் கைப்பட எழுதிய தற்கொலைக் கடிதமும் கிடைத்தது.
முதலில், இது விபத்தால் நேரிட்ட மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதையும் படிக்கலாமே.. தீபாவளியைக் கொண்டாட ஊருக்குச் செல்வோர் கவனத்துக்கு..
விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் கணவர், லென்ட்வே என்பவரிடம் வீடு வாங்குவதற்காக 6.50 லட்சம் பணம் கடன் வாங்கியுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக அந்தப் பணத்தை திரும்ப செலுத்த இயலவில்லை. இதனால் தொடர்ந்து லென்ட்வே, இவர்களது வீட்டுக்கு வந்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 21ஆம் தேதி இவர்களது வீட்டுக்கு வந்த லென்ட்வே, வீட்டிலிருந்த பெண்ணை மிரட்டி, தற்கொலைக் கடிதம் எழுத வைத்து, பிறகு கழுத்தை நெறித்துக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், சந்தேகத்தின்பேரில், லென்ட்வேவிடம் நடத்திய விசாரணையில், அவர் பெண்ணைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து குற்றவாளி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.