வாராணசி: உத்தரப்பிரதேச மாநிலத்தில், நீட் முறைகேடு கும்பலுடன் தொடர்பிலிருந்த 25 மாணவர்களின் நீட் தேர்வு முடிவை நிறுத்திவைக்கமாறு தேசிய தேர்வு முகமைக்கு உத்தரப்பிரதேச காவல்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.
அனைத்து மாணவர்களின் முழு விவரங்கள், மாணவர்களின் கைவிரல் ரேகை உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய முழு அறிக்கையை வாராணசி காவல்துறை ஆணையர் அனுப்பி வைத்துள்ளார்.
இதர மாநிலங்களுக்கும் விசாரணைக் குழுவினர் சென்று ஆலோசனை நடத்துவார்கள். நீட் தேர்வு முறைகேடு கும்பலுக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது என்றும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே.. தீபாவளியைக் கொண்டாட ஊருக்குச் செல்வோர் கவனத்துக்கு..
செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், நீட் தேர்வு முறைகேட்டுக் கும்பல் ஒன்று நிலேஷ் சிங் என்கிற பிகே என்பவர் தலைமையில் நடைபெற்று வருவதையும், அவரது ஒட்டுமொத்த குடும்பமும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதையும் வாராணசி காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இந்த மோசடிக் கும்பல், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிலாக, அவர்களது கும்பலைச் சேர்ந்தவர்கள் தேர்வெழுதி நீட் தேர்வில் வெற்றி பெற வைத்துள்ளனர். இதற்காக அவர்கள் ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோரிடமிருந்தும் மிகப்பெரிய தொகையை பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.