புது தில்லி: நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, செப்டம்பர் 12ஆம் தேதி திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.
இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தோ்வு (நீட் 2021) வரும் செப்டம்பா் மாதம் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூலை 13 ஆம் தேதி மாலை 5 முதல் விண்ணப்பிக்கும் பணிகள் தொடங்கி, ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் செப்டம்பர் 12ஆம் தேதியே நடைபெறுவதால், நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒரு சிலர் கேட்கிறார்கள் என்று 16 லட்சம் பேர் எழுதும் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க இயலாது என்று கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளனர்.