மக்களை கவரும் மத்திய அரசின் திட்டத்தின் ஓர் அங்கமாக அடுத்த 9 வாரங்களில் 70 மத்திய அமைச்சர்கள், ஜம்மு காஷ்மீருக்கு பயணம் செய்யவுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஏழு நாள்களில், குறைந்தபட்சம் 10 மத்திய அமைச்சர்கள் அங்கு செல்லவுள்ளனர்.
அதன் தொடக்கமாக, ஜம்முவுக்கு சென்றுள்ள மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இணையமைச்சர்கள் கைலாஷ் செளத்ரி, சோபா கரண்ட்லாஜே ஆகியோர் விவசாயிகள், விஞ்ஞானிகளை இன்று சந்தித்து பேசவுள்ளனர். வெள்ளி மற்றும் சனிக்கிழமை சுற்றுலாத்துறை இணையமைச்சர் அஜய் பட்டும், திங்கள் மற்றும் செவ்வாய்கிழமையன்று சிறுபான்மை நலத்துறை இணையமைச்சர் ஜான் பார்லாவும் ஜம்மு காஷ்மீருக்கு செல்லவுள்ளனர்.
அதேபோல், இந்த வாரத்தில், மூத்த மத்திய அமைச்சர்களான நாராயண ரானே, அர்ஜுன் முண்டா ஆகியோரும் செல்லவுள்ளனர். அடுத்த ஓரிரு நாள்களில், மற்ற அமைச்சர்கள் எப்போது செல்வார்கள் என்ற பட்டியல் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர்.
இதையும் படிக்க | நாடு முழுவதும் புதிதாக 34,973 பேருக்கு தொற்று: 260 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து இரண்டாவது முறையாக, மத்திய அமைச்சர்கள் ஜம்மு காஷ்மீருக்கு செல்லவுள்ளனர்.