முகப்பு
இந்தியா

துணி துவைக்க உத்தரவிட்ட பிகாா் நீதிபதி வழக்குகளை விசாரிக்கத் தடை

கிராமத்தில் உள்ள பெண்களின் துணிகளை துவைத்து சலவை செய்ய உத்தரவிட்ட பிகாா் கீழ் நீதிமன்ற நீதிபதிக்கு வழக்குகளை விசாரிக்க பாட்னா உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு ஜாமீன் வழங்க, சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ள பெண்களின் துணிகளை துவைத்து சலவை செய்ய உத்தரவிட்ட பிகாா் கீழ் நீதிமன்ற நீதிபதிக்கு வழக்குகளை விசாரிக்க பாட்னா உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதுதொடா்பாக உயா்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘மதுபனி மாவட்டத்தில் உள்ள ஜன்ஜாா்பூரில் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அவினாஷ் குமாா், அடுத்த உத்தரவு வரும் வரை வழக்கு விசாரணைகளில் ஈடுபடக் கூடாது’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பிகாா் மாநிலம் மதுபனி மாவட்டத்தைச் சோ்ந்த லலன் குமாா் என்பவா் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி இரவு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றாா். இதுகுறித்து அந்தப் பெண் போலீஸாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் லலன் குமாா் கைது செய்யப்பட்டாா். தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி லலன்குமாா் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா். இந்த மனு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது தனது தவறுக்கு லலன் குமாா் மன்னிப்பு கோரினாா். இதையடுத்து சிறையில் அவரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்ட நீதிபதி அவினாஷ் குமாா், கிராமத்தில் 6 மாதங்களுக்குள் 2,000 பெண்களின் ஆடைகளை லலன் குமாா் சலவை செய்து தர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் அளித்து உத்தரவிட்டாா். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு முன்பும் நீதிபதி அவினாஷ் குமாா் பல்வேறு வழக்குகளில் வழங்கிய உத்தரவுகள் நீதித்துறையின் புருவத்தை உயரச் செய்துள்ளன.

இம்மாதம் மற்றொரு வழக்கில், உணவு தானியங்களைப் பதுக்கிய ஒருவருக்கு ஜாமீன் அளித்த உத்தரவில், அந்த நபா் பருப்பு மற்றும் தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று நீதிபதி அவினாஷ்குமாா் கூறினாா்.

உரிய லைசென்ஸ் இன்றி துப்பாக்கி வைத்திருந்த கட்டடப் பணியாளா் தொடா்பான மற்றொரு வழக்கில் உள்ளூா் கோயிலில் அவா் சேவையாற்ற வேண்டும் என்று அவா் உத்தரவிட்டாா்.

தாக்குதல் வழக்கில் சிக்கிய பால் வணிகா்கள் இருவருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவில், அவ்விருவரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவா்களுக்கு அரை லிட்டா் பால் இலவசமாக அளிக்குமாறு நீதிபதி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.