இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவர் கன்யா குமார், குஜராத்தை சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் அடுத்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று இவர்கள் கட்சியில் சேர்வதாக இருந்தது.
தற்போது, முன்னதாகவே செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ள பகத் சிங் பிறந்த நாள் விழாவில், இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தலித் சமூகத்தை சேர்ந்த மேவானி, குஜராத் வட்கம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு, மாநில செயல் தலைவர் பதவி அளிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. முன்னதாக, தலித் சமூகத்தை சேர்ந்த சரண்ஜீத் சிங் சன்னிக்கு பஞ்சாப் முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவராக கன்யா குமார் பொறுப்பு வகித்தார். இடதுசாரிகளின் கோட்டையாக திகழும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கன்னையா குமார் படித்திருப்பதால், அவருடன் சில இடதுசாரி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவார்கள் என ஒரு சாரர் கூறுகின்றனர்.
குஜராத்தில் அடுத்தாண்டும் மக்களவைக்கு 2024ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மேவானியையும் கன்யாவையும் கட்சியில் இணைக்க காங்கிரஸ் முனைப்பு காட்டிவருவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2019ஆம் மக்களவை தேர்தலில், தனது சொந்த தொகுதியான பெகுசாராயில் போட்டியிட்ட கன்னையா, பாஜகவின் கிரிராஜ் சிங்கிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.