உ.பி.யில் ராகேஷ் டிகைத்துக்கு உற்சாக வரவேற்பு: வேளாண் போராட்ட வெற்றி எதிரொலி
வேளாண் போராட்ட வெற்றிக்கு பிறகு உத்தரப் பிரதேசம் சென்ற பாரதிய கிசான் யூனியன் தலைவா் ராகேஷ் டிகைத்துக்கு அம்மாநில விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வேளாண் போராட்ட வெற்றிக்கு பிறகு உத்தரப் பிரதேசம் சென்ற பாரதிய கிசான் யூனியன் தலைவா் ராகேஷ் டிகைத்துக்கு அம்மாநில விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் சாலைகளில் திரண்ட விவசாயிகள் டிகைத்துக்கு பூக்கள் தூவி வரவேற்றனர்.
வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை விவசாயிகளின் கருத்துகளைக் கேட்காமல் கடந்த ஆண்டு மத்திய அரசு இயற்றியது.
இதனை எதிர்த்து அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் வெற்றி பெற்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் இறங்கிவராத மத்திய அரசு கடந்த நவ.19-ஆம் தேதி வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறுவதாக அறிவித்தது.
இதனையடுத்து விவசாயிகள் தில்லி எல்லைகளிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அந்தவகையில் பாரதிய கிசான் யூனியன் தலைவா் ராகேஷ் டிகைத் இன்று தனது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு வருகைபுரிந்தார்.
சொந்த ஊரான மீரட் பகுதிக்குச் சென்ற அவருக்கு, விவசாயிகள் சாலைகளில் திறண்டு பூக்களைத் தூவி வரவேற்றனர். அப்போது பேசிய அவர், தேர்தலில் நடக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. எந்தவொரு அரசியல் கட்சிகளும் எனது பெயரைப் பயன்படுத்தக்கூடாது. அரசியல் பதாகைகளிலும் எனது படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கூறினார்.