முகப்பு
இந்தியா

இலவசங்களை வழங்கும் மாநிலங்கள் இலங்கை போன்ற நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம்: மோடியிடம் செயலாளர்கள் கவலை

இலவசங்களை வழங்கும் சில மாநிலங்கள், இலங்கை மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடலாம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:53 AM
பகிர்:


புதுதில்லி: இலவசங்களை வழங்கும் சில மாநிலங்கள், இலங்கை மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடலாம் எனவும், பல மாநிலங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அவர்களுக்கு மத்திய அரசு உதவாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள் எச்சரித்தனர். 

மாநில அரசுகளில் பணியாற்றி தற்போது மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள் உள்பட பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். 

சுமார் 4 மணிநேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் கவர்ச்சிக்கரமான திட்டங்கள் குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.  

இலவசங்களை வழங்கும், அறிவித்துள்ள சில மாநிலங்கள், இலவச திட்டங்களால் மாநிலத்தின் பொருளாதார நிலை அதலபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும், இலங்கை மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ளது போன்ற பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடலாம் எனவும், பல மாநிலங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அவர்களுக்கு மத்திய அரசு உதவாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று எச்சரித்தனர். 

பஞ்சாப், தில்லி, தெலங்கானா, ஆந்திரம், மேற்குவங்கம் ஆகிய மாநில அரசுகள் அறிவித்துள்ள இலவச திட்டங்கள் பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை என்றும், பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் அரசியல் தேவைகளை சீரமைக்கும் ஒரு சமநிலையான முடிவை எடுப்பதற்கு அவர்களை வலியுறுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். 

தேர்தலின் போது அரசியல் கட்சிகளால் வாக்குறுதியளிக்கப்பட்ட இலவசங்கள் குறித்து கவலை தெரிவித்த அதிகாரிகள், மாநிலத்தின் நிதி நிலைமையை சீரமைக்காமல் இலவச திட்டங்களை தொடர்ந்தால், பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாறியுள்ளதை அடுத்து அவை சந்திக்கவுள்ள விளைவுகள் குறித்து  அச்சம் தெரிவித்த மத்திய அரசு அதிகாரிகள்,  ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளால் நாட்டின் நிதி நிலைமைகளில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. 

இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கிட பல அரசியல் கட்சிகள், மாநில நிதிநிலை அறிக்கையில் அழுத்தத்தை கொடுத்து வருகின்றன. இதனால் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கியமான சமூகத் துறைகளுக்கு அதிக நிதிகளை ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது என்று கூறினர். 

இதனைத்தொடர்ந்து சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மீது கவனம் செலுத்தவது, வறுமையைக் குறைப்பது, மாநில மற்றும் மத்திய அரசில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் முன்னேற்றத்திற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு செயலாளர்கள், அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →