தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசு அறிவுறுத்தல்
தனியார் மையங்களில் 18-59 வயதுக்குட்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை கரோனா தடுப்பூசி வழங்குதல் குறித்து அனைத்து மாநிலங்கள் சுகாதார செயலாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தியது.
புது தில்லி: தனியார் மையங்களில் 18-59 வயதுக்குட்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை கரோனா தடுப்பூசி வழங்குதல் குறித்து அனைத்து மாநிலங்கள் சுகாதார செயலாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தியது.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர், முதல் மற்றும் இரண்டாவது தவணையின்போது பயன்படுத்தப்பட்ட அதே தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணையாகவும் வழங்கப்படவேண்டும் என்றார். அனைத்து பயனாளிகளும் ஏற்கனவே கோவின் தளத்தில் பதிவு செய்துள்ளதால், முன்னெச்சரிக்கை தவணைக்கு புதிய பதிவுகள் எதுவும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தடுப்பூசிகளும் கோவின் தளத்தில் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், இணைய முன்பதிவு மற்றும் நேரடியாக மையத்திற்கு சென்று தடுப்பூசி பெறுதல் ஆகிய இரண்டு வசதிகளும் தனியார் மையங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் முன்னர் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தனியார் தடுப்பூசி மையங்களை பராமரிக்க வேண்டும். தடுப்பூசியின் விலைக்கு மேல் ஒரு தடுப்பூசிக்கு அதிகபட்சமாக ரூ 150 வரை சேவைக் கட்டணமாக வசூலிக்கலாம். சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள், அரசு தடுப்பூசி மையங்களில் இலவச தடுப்பூசி உள்பட, எந்த தடுப்பூசி மையத்திலும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை தொடர்ந்து பெற்று கொள்ளலாம்.
12-க்கு அதிகமான வயதுடையவர்களுக்கு முதலாவது மற்றும் இரண்டாவது தவணை வழங்கலை விரைவுபடுத்தவும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.