ஆந்திரத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இதுவரை 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநில குண்டூரைச் சார்ந்த 13 வயது சிறுமியின் தாயார் கடந்த ஆண்டு கரோனாவால் உயிரிழந்ததால் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் பணியாளரான சுவர்ணகுமாரி என்பவர் அச்சிறுமியை தத்தெடுத்து வளர்த்துவதாக சிறுமியின் தந்தையிடம் கூறியுள்ளார்.
பின்னர், அவரும் ஒப்புக்கொள்ள அப்பெண் படிக்க வைப்பதாக அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
இந்நிலையில், அங்கிருந்து தப்பி வந்த அச்சிறுமி தன் தந்தையிடம் நடந்ததைச் சொல்லி அழுதிருக்கிறாள். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்தார்.
வழக்கைப் பதிந்து விசாரணை நடத்தியதில் அச்சிறுமியை இதுவரை 80 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதில், காவல்துறையினர் அடையாளம் உறுதியான 74 பேரை கைது செய்துள்ளனர்.
சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.