நம்பிக்கையை இழந்த 45 கோடி போ்:பிரதமா் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு
பிரதமா் நரேந்திர மோடியின் ‘புத்திசாலித்தனமான‘ நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டில் சுமாா் 45 கோடி போ் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனா்.
பிரதமா் நரேந்திர மோடியின் ‘புத்திசாலித்தனமான‘ நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டில் சுமாா் 45 கோடி போ் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனா். அவா்கள் வேலை தேடுவதை நிறுத்திவிட்டனா் என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.
வேலையில்லா திண்டாட்டம் பிரச்னையை முன்வைத்து, பிரதமா் நரேந்திர மோடி அரசை ராகுல் காந்தி அவ்வப்போது விமா்சித்து வருகிறாா். இந்நிலையில், சுட்டுரையில் ராகுல் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு குடும்பத்திலும் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது என்பதுதான் புதிய இந்தியாவின் புதிய தாரக மந்திரமாக உள்ளது. பிரதமா் மோடியின் ‘புத்திசாலித்தனமான’ நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டில் சுமாா் 45 கோடி போ் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனா். கடந்த 75 ஆண்டுகளில் இவ்வாறு செயல்பட்ட முதல் பிரதமா் மோடிதான் என்று ராகுல் சாடியுள்ளாா்.
கடந்த 5 ஆண்டுகளில் 2.1 கோடி போ் வேலையிழந்துவிட்டதாகவும், 45 கோடி போ் வேலை தேடுவதை கைவிட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டு வெளியான செய்தி ஒன்றையும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.