நாட்டில் ஒமைக்ரான் ஆதிக்கம்: இந்திய கரோனா தீநுண்மி மரபியல் கூட்டமைப்பு தகவல்
நாட்டில் கரோனா தீநுண்மியின் உருமாறிய ரகமான ஒமைக்ரானின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதாகவும், பெருமளவில் பரவும் தன்மைவாய்ந்த பிஏ.2.75 ரக தீநுண்மியின் மாதிரி கண்டறியப்பட்டுள்ளதாகவும் இந்திய கரோனா தீநுண்மி
நாட்டில் கரோனா தீநுண்மியின் உருமாறிய ரகமான ஒமைக்ரானின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதாகவும், பெருமளவில் பரவும் தன்மைவாய்ந்த பிஏ.2.75 ரக தீநுண்மியின் மாதிரி கண்டறியப்பட்டுள்ளதாகவும் இந்திய கரோனா தீநுண்மி மரபியல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 11-இல் மேற்கொண்ட கரோனா தீநுண்மி பரவல் விகித விவரங்களை இந்தக் கூட்டமைப்பு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒவ்வொரு மாநிலத்திலும் பிஏ.2.75 ரக தீநுண்மி பரவலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இந்தக் காலகட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை; நோய்த் தாக்கமும் தீவிரமடையவில்லை.
இருப்பினும், நாட்டில் ஒமைக்ரான் தீநுண்மி பரவலும் அதன் உருமாறிய பிஏ.2, பிஏ.2.38 ரக தீநுண்மி பரவலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கடந்த ஜூலை 4 வரையிலான தீநுண்மி உருமாற்ற விவரமும் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில், ‘கரோனா தீநுண்மி பரவல் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒமைக்ரானின் உருமாறிய ரகமான பிஏ.2 பரவல் 64.9 சதவீதமாகவும், பிஏ.2.38 பரவல் 26.4 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
கரோனா தீநுண்மியின் மரபணு மாற்றத்தைக் கண்டறிய கடந்த 2020-இல் மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இந்திய கரோனா தீநுண்மி மரபியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.