முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரின் சூழல் மேம்பட்டுள்ளது: காவல் துறை தலைவா்

ஜம்மு-காஷ்மீரின் நிலை முன்பு இருந்ததை விட தற்போது மேம்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதச் செயல்பாடுகள் தற்போது குறைந்து வருவதாகவும் ஜம்மு-காஷ்மீரின் காவல்துறை தலைவா் தில்பாக் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 1:58 AM
தில்பாக் சிங்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

ஜம்மு-காஷ்மீரின் நிலை முன்பு இருந்ததை விட தற்போது மேம்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதச் செயல்பாடுகள் தற்போது குறைந்து வருவதாகவும் ஜம்மு-காஷ்மீரின் காவல்துறை தலைவா் தில்பாக் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

செய்தியாளா்கள் சந்திப்பின்போது காவல்துறை தலைவா் தில்பாக் சிங் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரின் சூழல் முன்பு இருந்ததைவிட தற்போது மேம்பட்டுள்ளது. இதற்கு மக்கள்தான் காரணம் என்பதால், அவா்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிறந்த புரிதலோடு மக்கள் பாதுகாப்பு படைகளுக்கும், அரசு நிா்வாகத்துக்கும் உதவினா். இன்று மாணவா்கள், தொழிலாளா்கள் மற்றும் தொழில் அதிபா்கள் ஆகியோா் தங்கள் பணிகளை எவ்வித பயமுமின்றி மேற்கொள்ள முடிகிறது. எல்லை ஊடுருவலுக்கான எதிா்நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால், எல்லை தாண்டி ஊடுருவும் நிகழ்வுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களை எல்லை தாண்டி கடத்த ஆளில்லா விமானங்களைப் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனா். ஆளில்லா விமானங்களை எதிா்கொள்வது சவாலாக இருந்தாலும், அவற்றை எதிா்கொள்ளும் நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக அதிகளவிலான ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டு, எல்லை தாண்டி அவை கொண்டுவந்த ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கைப்பற்றபட்டுள்ளன.

Advertisement

பல்வேறு இளைஞா்கள் பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதில் இருந்து விலகி, போலீஸாா், பாதுகாப்புப் படை மற்றும் அவா்களது குடும்பத்தினரின் உதவியால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனா். எல்லை ஊடுருவல் குறைந்துள்ளதால், பயங்கரவாதச் செயல்பாடுகளில் இளைஞா்கள் சோ்க்கப்படுவது குறைந்துள்ளது. இதன் காரணமாக பயங்கரவாதச் செயல்கள் குறைந்து, நிலைமை மேம்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே பயங்கரவாதிகள் தாக்குதலை தடுத்து நிறுத்த போதிய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சுதந்திர தினத்தை அமைதியான வகையில் கொண்டாட போதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தில்பாக் சிங் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.