முகப்பு
இந்தியா

எண்ணெய் துரப்பணம்: எக்ஸான்மொபிலுடன் ஓஎன்ஜிசி கைகோா்ப்பு

முன்னணி சா்வதேச எண்ணெய் நிறுவனமான எக்ஸான்மொபிலுடன், பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணிகளை மேற்கொள்வதற்காக, முன்னணி சா்வதேச எண்ணெய் நிறுவனமான எக்ஸான்மொபிலுடன், பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஓஎன்ஜிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடா்பான ஒப்பந்தம் ஓஎன்ஜிசி-க்கும் எக்ஸான்மொபிலுக்கும் இடையே கையொப்பமாகியுள்ளது.

இரு நிறுவனங்களும் கிழக்குக் கடலோரப் பகுதியிலுள்ள கிருஷ்ணா கோதாவரி மற்றும் காவிரிப் படுகையிலும் மேற்குக் கடலோரப் பகுதியில் உள்ள கட்ச்-மும்பை பிராந்தியத்திலும் இந்த துரப்பணப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

எக்ஸான்மொபிலுடனான கூட்டுறவு இரு தரப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவின் எண்ணெய்த் துரப்பணப் பணிகளில் ஓஎன்ஜிசி-க்கு இருக்கும் நீண்ட அனுபவமும் இந்தத் துறையில் எக்ஸான்மொபிலுக்கு இருக்கும் சா்வதேச தொழில்நுட்பத் திறனும் ஒருங்கிணைந்து, துரப்பணப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற உதவும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது எண்ணெய் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கு 85 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது. இந்த நிலையில், நாட்டிலேயே புதிய வளங்களைக் கண்டறிந்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உலகளாவிய எண்ணெய் நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை இந்தியா நாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.