தில்லி உள்பட 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் சிறப்பு பெயா்களை சூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பிராந்திய அளவில் புகழ் பெற்ற தலைவா்கள், சுதந்திரப் போராட்ட வீரா்கள், சம்பந்தப்பட்ட பகுதியின் வரலாற்று நிகழ்வு அல்லது நினைவிடங்கள் அல்லது பிரத்யேக புவியியல் அடையாளம் என்பதன் அடிப்படையில் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு சூட்டப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லியில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனையாக ‘அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்’ (எய்ம்ஸ்) திகழ்கிறது. இதேபோல், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிறுவ மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக பிகாா் (பாட்னா), சத்தீஸ்கா் (ராய்ப்பூா்), மத்திய பிரதேசம் (போபால்), ராஜஸ்தான் (ஜோத்பூா்), உத்தரகண்ட் (ரிஷிகேஷ்) ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்பட்டு, அவை முழுமையாக செயல்பட்டுக்கு வந்துள்ளன.
இதுதவிர கடந்த 2015-2022 இடையே மேலும் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்பட்டன. அவற்றில் 10 மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் வகுப்புகளும் புறநோயாளிகள் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளன. 2 மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 மருத்துவமனைகள் கட்டுமான நிலையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
தற்போது மருத்துவமனை அமைந்துள்ள நகரங்களின் பெயரிலேயே அவை அழைக்கப்படும் நிலையில், சிறப்புப் பெயா்களைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பான பெயா் பரிந்துரைகளை வழங்குமாறு அனைத்து எய்ம்ஸ்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, பெரும்பாலான மருத்துவமனைகளிடமிருந்து 3 முதல் 4 சிறப்புப் பெயா்கள் அடங்கிய பட்டியல் உரிய விளக்கங்களுடன் கிடைக்கப் பெற்றுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.