மத்திய கேரளத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அடுத்த 2 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று எச்சரித்தனர்.
கொச்சி நகரின் பல பகுதிகளிலும், ஆலப்புழா, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள சில நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல மத்திய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
கடலோர ஆலப்புழா மாவட்டத்தின் நெற்களஞ்சியமான குட்டநாட்டில் பாயும் ஆறுகள் பல இடங்களில் அதன் எல்லையைத் தாண்டி நீர்மட்டம் உயர்ந்தது.
எர்ணாகுளம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய கேரளாவின் மலைப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் பல ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.