மோடி ஆட்சியில் நாட்டின் கடனும், கருப்புப் பணமும் அதிகரித்துள்ளதாக வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராகவும் பிரசாந்த் பூஷண் பல்வேறு பிரச்னைகளில் கருத்து தெரிவித்து வருகிறார்.
பாஜகவின் கோட்டையாக திகழும் குஜராத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாஜக ஆட்சிக்கு முந்தைய பொருளாதார நிலையையும், தற்போதைய பொருளாதார நிலையையும் குறிப்பிடும் ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண் பகிர்ந்துள்ளார்.
அதில், மோடி ஆட்சிக்கு முன்பு டாலர் விலை ரூ. 62.33ஆகவும், இந்தியாவின் கடன் ரூ. 56 லட்சம் கோடியாகவும், ஸ்விஸ் வங்கியிலுள்ள கருப்புப் பணம் ரூ. 7,000 கோடியாகவும், உலக பட்டினிப் பட்டியலில் இந்தியா 55-வது இடத்திலும் இருந்தது.
ஆனால், 2022-ல் டாலர் விலை ரூ. 81.47ஆகவும், இந்தியாவின் கடன் ரூ. 156 லட்சம் கோடியாகவும், ஸ்விஸ் வங்கியிலுள்ள கருப்புப் பணம் ரூ. 30,000 கோடியாகவும், உலக பட்டினிப் பட்டியலில் இந்தியா 107-வது இடத்திலும் இருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.