அகர் மால்வா: தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் பல சர்ச்சைகளில் சிக்கிய நம்தியோ தாஸ் தியாகி என்கிற கம்ப்யூட்டர் பாபா, சனிக்கிழமை மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொண்டார்.
இவ்வளவுக்கும் பிறகு பாஜக சும்மா இருக்குமா என்ன? எவ்வாறு ஒரு குற்றவாளி அதுவும் நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் சேர்ந்து நடப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
2020ஆம் ஆண்டு, இந்தூரில் சட்டவிரோதமாக ஆசிரமம் கட்டிய வழக்கிலும், அதனை இடிக்க வந்த அதிகாரிகளை தடுத்து, பணி செய்ய விடாத வழக்கிலும் கைது செய்யப்பட்டவர்.
இந்த நிலையில், அகர் மால்வா மாவட்டத்தில் இன்று காலை தொடங்கிய ஒற்றுமை நடப்பயணத்தின் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் கம்ப்யூட்டர் பாபாவும் இணைந்து கொண்டார்.
நடைப்பயணத்தின்போது, ராகுல் காந்தி மற்றும் திக் விஜய் சிங்குடன் சில நிமிடங்கள் பேசியபடி நடந்து வந்தார் கம்ப்யூட்டர் பாபா.
காங்கிரஸிலிருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த நரேந்திர சலுஜா இதனை விமரிசித்துள்ளார். அதாவது, முன்பு, கன்னையா குமர், பிறகு நடிகர் ஸ்வர பாஸ்கர், தற்போது கம்ப்யூட்டர்பாபா என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எந்தவிதமான நடைப்பயணம் இது? கம்ப்யூட்டர் பாபா ஒரு குற்றவாளி. நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டர். பல வழக்குகள் அவர் மீது உள்ளது. ஒற்றுமை நடைப்பயணத்தில் இதுபோன்ற நபர்கள், ராகுல் காந்தியுடன் இணைந்து எப்படி நடக்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.