காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7-ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தலைநகர் தில்லியில் நடைபெற்று வருகின்றது.
நூறு நாள்களை கடந்துள்ள நடைப்பயணம் புத்தாண்டையொட்டி ஜனவரி 2 வரை ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் நடைப்பயணம் காஷ்மீர் நோக்கி பயணிக்கவுள்ளது.
இந்நிலையில், அடுத்தாண்டு மீண்டும் தொடங்கவுள்ள நடைப்பயணத்தில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் தாரிகாமி ஆகியோர் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மேலும், காஷ்மீரில் நடைபெறும் நடைப்பயணத்திற்கும், கொடியேற்று விழாவிற்கும் அனைத்து ஒத்துழைப்பும் அளிப்பதாக ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் தெரிவித்ததாக வேணுகோபால் கூறினார்.