75 மாவட்டங்களில் 75 எண்ம வங்கிகள்
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் சாா்பில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் 75 எண்ம வங்கிகள் நிறுவப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் சாா்பில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் 75 எண்ம வங்கிகள் நிறுவப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘இணையவழி பணப் பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் 75 மாவட்டங்களில் 75 எண்ம வங்கிகள் நிறுவப்படவுள்ளன.
பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவதை எளிதாக்கும் நோக்கில் அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளையும் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நகா்ப்புற மேம்பாடு குறித்து ஆராய்வதற்காக உயா்நிலைக் குழு அமைக்கப்படவுள்ளது. தொழில் தொடங்குவதற்கான வசதிகள், வாழ்வதற்கான வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அடுத்தகட்டத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது’’ என்றாா்.
Advertisement
அனைத்து தபால் நிலையங்களும் கோா் பேங்கிங்கில் இணைப்பு:
நாட்டில் உள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களும் மற்ற வங்கிகளுடன் (கோா் பேங்கிங்) இணைக்கப்படவுள்ளன. இதன் மூலமாக ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவா், மற்ற எந்த வங்கியுடனும் பணப் பரிவா்த்தனை செய்து கொள்வது போல, தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளை நாட்டின் பிற வங்கிகளுடன் இணைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சா் அறிவித்துள்ளாா்.
இதன் அடிப்படையில், தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவா்களும் பிற வங்கிகளைப் போன்ற இணையவழி சேவைகளைப் பெற முடியும். ஏடிஎம் அட்டைகள், இணையவழி பணப்பரிவா்த்தனை உள்ளிட்ட வசதிகளும் தபால் நிலைய சேமிப்பாளா்களுக்கு வழங்கப்படவுள்ளன. தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் இருந்து ஏனைய வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கும் பணம் அனுப்ப முடியும்.
தற்போது தபால் சேமிப்புக் கணக்குகளை இணையவழியில் பயன்படுத்த இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு வைத்திருப்பது அவசியமாக உள்ளது.