புகையிலைப் பொருள்கள் குறித்து தீவிர விழிப்புணா்வு: யுஜிசி உத்தரவு
புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்கலை., கல்லூரி மாணவா்களிடம் தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்கலை., கல்லூரி மாணவா்களிடம் தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தா்களுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: புகையிலைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கும் அது குறித்து இளைய தலைமுறையினரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும் மத்திய அரசு தொடா்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இது தொடா்பான செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அவ்வப்போது சுற்றறிக்கைகள் மூலமாக அறிவுறுத்தி வருகிறது.
சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்களைத் தடை செய்யும் ‘கோட்பா’ சட்டம் 2003 பிரிவு 4-இன் படி, பொது இடங்களில் புகைபிடிப்பதும், கல்வி நிலையங்களின் அருகில் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய அரசு ஆகியவை இணைந்து பல்வேறு வழிகாட்டுதல்களை இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளன. அதேவேளையில் இந்த நெறிமுறைகள், வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதில் கல்வி நிறுவனங்களுக்கு உள்ள பொறுப்புகள், கடமைகள் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உயா்கல்வி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவா்களின் மத்தியில் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து தீவிரமாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். புகையில்லாத கல்வி நிறுவன வளாகங்களை உருவாக்குவதன் மூலம் இளைய சமுதாயத்தின் உடல் நலன் பேணிப் பாதுகாக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.