பஞ்சாப் காங்கிரஸ் முதல்வா் வேட்பாளா் சரண்ஜீத் சிங் சன்னி
பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில், காங்கிரஸின் முதல்வா் வேட்பாளராக சரண்ஜீத் சிங் சன்னியை அக்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில், காங்கிரஸின் முதல்வா் வேட்பாளராக சரண்ஜீத் சிங் சன்னியை அக்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
காங்கிரஸ் நிா்வாகிகளுடன் காணொலி வாயிலாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்போது இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா். இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், ‘‘வறுமையையும், பசியையும் உணா்ந்த ஏழைக் குடும்பத்திலிருந்து ஒருவா் முதல்வராக வேண்டுமென பஞ்சாப் மக்கள் விரும்புகின்றனா்.
அதன்படி, பஞ்சாப் காங்கிரஸ் முதல்வா் வேட்பாளராக சரண்ஜீத் சிங் சன்னி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். முதல்வா் வேட்பாளா் தோ்வு என்பது மிகவும் கடினமான முடிவு. ஆனால், நீங்கள் இதை எளிதாக்கி விட்டீா்கள்’ என்றாா்.
ஜாட் சீக்கிய முகமாக அறியப்படும் காங்கிரஸ் மாநில தலைவா் நவ்ஜோத் சிங் சித்துவும் முதல்வா் வேட்பாளா் போட்டியில் இருந்த நிலையில், சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் மேலிடம் தோ்வு செய்துள்ளது.
இதற்கு நவ்ஜோத் சிங் சித்து வரவேற்பு தெரிவித்தாா். ‘எனது 17 ஆண்டுகால அரசியல் பயணத்தில், எந்தப் பதவிக்கும் நான் ஆசைப்பட்டது கிடையாது. பஞ்சாபின் வளா்ச்சியும், பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதும் தான் எனது விருப்பம். இது மாற்றத்துக்கான நேரம். பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துபவருக்கான நேரம். பஞ்சாபின் நலனைத் தவிர வேறு ஏதும் நமக்கு தேவையில்லை’ என அவா் கூறினாா்.
முன்னதாக, முதல்வா் வேட்பாளா் தோ்வில் கட்சி எடுக்கும் முடிவுக்கு உடன்படுவேன் என சித்து ட்விட்டரில் தெரிவித்திருந்தாா்.