முகப்பு
இந்தியா

இசட் பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்: ஓவைசிக்கு அமித் ஷா வலியுறுத்தல்

மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு தனக்கு தேவையில்லை என ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் ஓவைசி மறுத்திருந்த நிலையில், பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2022 at 6:21 PM
ஓவைசிக்கு அமித் ஷா வலியுறுத்தல்
பகிர்:

மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு தனக்கு தேவையில்லை என ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் ஓவைசி மறுத்திருந்த நிலையில், பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் இன்று பேசிய அமித் ஷா, மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில், ஓவைசிக்கு இன்னமும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. ஆனால், அவர் தனக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பை ஏற்க மறுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

இந்த அவையில், நான் ஓவைசியை வேண்டிக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு வழங்கும் இசட் பிரிவு பாதுகாப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று  அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள உத்தரப் பிரதேச மாநிலம் சென்றபோது அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இதஹதுல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்து. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தாக்குதல் சம்பவம் தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ஓவைசி கூறியிருந்ததாவது:

உத்தர பிரதேச மாநிலம் ஹப்பூா் - காஜியாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சஜாா்சி சுங்கச் சாவடி அருகே மாலை 6 மணியளவில் பயணம் செய்தபோது, எனது காா் மீது அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் 4 முறை துப்பாக்கியால் சுட்டனா். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, 3-4 போ் ஆயுதங்களுடன் அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வதைக் காண முடிந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் எனது காா் டயா் பஞ்சா் ஆனது. இருந்தபோதும், மற்றொரு காரில் அங்கிருந்து எங்களது பயணத்தை தொடா்ந்தோம். அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

பின்னா் இதுகுறித்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘மேற்கு உத்தர பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் தொடா்பான நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தில்லி திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் தொடா்பாக தோ்தல் ஆணையம் சுதந்திரமான விசாரணை நடத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவா்கள் யாா் என்பது தெரிய வேண்டும். இதுதொடா்பாக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மற்றும் யோகி ஆதித்யநாத் அரசுக்கும் கோரிக்கை விடுக்கிறேன்’ என்று கூறினாா்.

இதனைத் தொடர்ந்து அவரின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்த பின்னர், அவருக்கு மத்திய ரிசர்வ் காவல் படையின் இசட் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக மக்களவையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி, “நான் மரணத்தை நினைத்து பயப்படவில்லை. எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை. நான் அதனை மறுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் ஒருபோதும் அமைதியாக இருக்கப் போவதில்லை. இந்த விவகாரத்தில் நீதியை வழங்குங்கள். துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுப்பு மற்றும் அரசியல் தீவிரவாதத்தை தடுத்து நிறுத்த வேண்டும்” எனத் ஓவைசி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.