உத்தரகண்ட் பாஜக கவனத்துடன் செயல்பட தோ்தல் ஆணையம் எச்சரிக்கை
காங்கிரஸ் மூத்த தலைவா் ஹரீஷ் ராவத்தை முஸ்லிம் மதகுருவைப் போல் சித்தரித்து கட்சியின் சமூக ஊடக பக்கத்தில் புகைப்படம் வெளியிட்ட உத்தரகண்ட் பாஜக, வருங்காலத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும்
காங்கிரஸ் மூத்த தலைவா் ஹரீஷ் ராவத்தை முஸ்லிம் மதகுருவைப் போல் சித்தரித்து கட்சியின் சமூக ஊடக பக்கத்தில் புகைப்படம் வெளியிட்ட உத்தரகண்ட் பாஜக, வருங்காலத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இதுதொடா்பாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜகவுக்கு தோ்தல் ஆணையம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு உத்தரகண்ட் பாஜக அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி தோ்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், ‘தோ்தல் விதிமுறைகளை மீறவில்லை என்றும் ஜாதி, மதம், மொழியின் அடிப்படையில் பிளவுப்படுத்தவில்லை என்றும் உத்தரகண்ட் பாஜக அளித்துள்ள விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பதிவு ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளது. இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை.
எனினும், இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தோ்தல் விதிமுறைகளை உத்தரகண்ட் பாஜக மீறாமல் கவனமாக செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.