சமாஜவாதி ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகளுக்கு ரேஷன் பொருள்களுடன் 1 கிலோ நெய் வழங்கப்படும் என கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ரே பரலியில் பிரசாரம் மேற்கொண்ட அகிலேஷ் பேசியதாவது:
"தேர்தல் வரை மட்டும்தான் ஏழைகளால் ரேஷன் பொருள்கள் பெற முடியும். தேர்தலுக்குப் பிறகு அவை வழங்கப்படாது. முன்பு நவம்பர் மாதம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உத்தரப் பிரதேச தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அது மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு அது நிறுத்தப்படும்.
மார்ச் மாதம் தேர்தல் முடிந்துவிடும் என்பதால் தில்லி பட்ஜெட்டில் ரேஷன் பொருள்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
இதையும் படிக்க | 'பாஜகவும் காங்கிரஸும் மிகவும் கேவலமாக அரசியல் செய்கின்றன' - கேஜரிவால் குற்றச்சாட்டு
சாமஜவாதி ஆட்சியில் உள்ள வரை ஏழைகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்படும். அத்துடன் கடுகு எண்ணெய் மற்றும் ஆண்டுக்கு இரண்டு சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும். ஏழைகளின் உடல்நலம் மேம்படைய ஒரு கிலோ நெய்யும் வழங்கப்படும்.
பாஜக அரசால் விநியோகிக்கப்படும் ரேஷன் பொருள்களின் தரம் மோசமாக இருந்தது. உப்பில் கண்ணாடி துகள்கள் இருந்ததாகவும் தகவல்கள் வந்தன.
உத்தரப் பிரதேசத்தில் 11 லட்சம் அரசுப் பணிகள் காலியாக உள்ளன. அந்தப் பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
பாஜக தலைவர்கள் வீடுவீடாகச் சென்று வாக்குகளை சேகரித்தனர். சில கிராமங்களுக்குச் சென்றபோது மக்கள் அவர்களிடம் காலி சமையல் எரிவாயு உருளைகளைக் காண்பித்துள்ளனர். இதனால், அந்தப் பிரசாரம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது.
பாஜக அரசின் கீழ் சட்டம் ஒழுங்கு சூழல் சீர்குலைந்துள்ளது. அதிகளவிலான காவல் நிலைய மரணங்கள் பாஜக ஆட்சியில்தான் நடந்துள்ளன. ஊழல் இரட்டிப்பாகியுள்ளது" என்றார் அவர்.