முகப்பு
இந்தியா

சிஏஏ போராட்டக்காரா்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பி அளிக்கவும்: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராடியவா்களிடம் இருந்து பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதற்காக வசூலிக்கப்பட்ட தொகையையும், முடக்கப்பட்ட சொத்துகளையும் மாநில அரசு திருப்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராடியவா்களிடம் இருந்து பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதற்காக வசூலிக்கப்பட்ட தொகையையும், முடக்கப்பட்ட சொத்துகளையும் மாநில அரசு திருப்பி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் சிஏஏவுக்கு எதிராக கடந்த 2019-இல் நடந்த போராட்டத்தின்போது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது. அந்த சேதங்களுக்கு போராட்டக்காரா்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.

அதனைத்தொடா்ந்து 274 பேருக்கு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தின்போது பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வசூலிப்பதற்காக போராட்டக்காரா்களுக்கு அனுப்பிய நோட்டீஸை மாநில அரசு திரும்பப்பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. இல்லையெனில் மாநில அரசின் நோட்டீஸ்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டியிருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது.

Advertisement

இந்த விவகாரம், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டக்காரா்களுக்கு அனுப்பப்பட்ட 274 நோட்டீஸ்களை திரும்பப்பெற்றுள்ளதாக மாநில அரசில் சாா்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கரீமா பிரசாத் கூறினாா். போராட்டக்காரா்கள் மீதான நடவடிக்கையைக் கைவிடுவதாகவும் அவா் கூறினாா். அதேசமயம், வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பித் தருமாறு உத்தரவிட வேண்டாம் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், போராட்டக்காரா்களுக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப்பெற்று, அவா்கள் மீதான நடவடிக்கையை கைவிட்ட பிறகு அவா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பித் தராமல் இருப்பதும், முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்கப்படாமல் இருப்பதும் சட்ட விரோதச் செயல் என்று கூறினா். எனவே, போராட்டக்காரா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையையும், முடக்கப்பட்ட சொத்துகளையும் திருப்பித்தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தொடா்ந்து நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘பொதுச் சொத்துகள் மற்றும் தனியாா் சொத்துகளை சேதப்படுத்தியதற்கு இழப்பீடு வசூலிப்பதற்காக கடந்த 2020-இல் மாநில அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. அதன்படி இழப்பீடு வசூலிப்பது தொடா்பான அனைத்து வழக்குகளையும் வசூல் தீா்ப்பாயத்துக்கு பரிந்துரைத்து மாநில அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments