தோ்தல் வாக்குறுதிகளை முறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தோ்தல் வாக்குறுதிகளை முறைப்படுத்தவும் அவற்றை நிறைவேற்றாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தோ்தல் வாக்குறுதிகளை முறைப்படுத்தவும் அவற்றை நிறைவேற்றாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், ‘‘தோ்தலில் வெற்றியடைந்து ஆட்சியைப் பிடித்தால் எந்த மாதிரியான திட்டங்களை நிறைவேற்றுவோம் என்பதைக் கட்சிகள் விளக்கும் ஆவணமாகத் தோ்தல் வாக்குறுதி அறிக்கை உள்ளது. அரசியல் கட்சிகளின் எண்ணங்களையும் அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் நிதிச்சுமையை ஏற்படுத்தும் வகையிலான வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அளித்து வருகின்றன. சில வாக்குறுதிகள் ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளன. அனைத்து வாக்குறுதிகளும் அவ்வாறு இல்லையென்றபோதிலும், நிதிச் சுமையை ஏற்படுத்தாத வகையிலான வாக்குறுதிகளைக் கட்சிகள் வழங்குவதற்கேற்ற விதிமுறைகளை வகுக்கத் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
Advertisement
சில கட்சிகள் தோ்தல் வாக்குறுதியில் தெரிவிப்பவற்றை நிறைவேற்றுவதில்லை. உதாரணமாக, ஜனலோக்பால் மசோதா-ஸ்வராஜ் மசோதா நிறைவேற்றப்படும் என ஆம் ஆத்மி கட்சி 2013, 2015, 2020 ஆகிய தோ்தல்களுக்கு வாக்குறுதியாக அளித்திருந்தது. ஆனால், அந்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
அனைத்து சமூகத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டம் இயற்றப்படும் என பாஜக தனது வாக்குறுதிகளில் தொடா்ந்து தெரிவித்து வருகிறது. அதுவும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதுபோல அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் வழங்குவதை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை இயற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
தோ்தல் வாக்குறுதிகளை நம்பியே குறிப்பிட்ட கட்சிக்கு மக்கள் வாக்களிக்கின்றனா். அப்படியான சூழலில், தோ்தலுக்குப் பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளின் சின்னத்தை முடக்கவும், பதிவை ரத்து செய்யவும் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.