மகாராஷ்டிர முதல்வரின் மனைவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து; பாஜக நிர்வாகிக்கு வலுக்கும் எதிர்ப்பு
கட்சி விட்டு கட்சி மாறும் ஜிதேன் கஜராயா, தற்போது மகாராஷ்டிர பெண்கள் குறித்து இழிவாத கருத்துகளை கூறிவருகிறார் என மும்பை மேயர் ஜிதேன் கஜராயா விமரிசித்துள்ளார்.
கடந்த ஜனவரி 4ஆம் தேதி, ராஷ்மி தாக்கரேவின் (மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி) புகைப்படத்தை பாஜகவின் மகாராஷ்டிர சமூக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிதேன் கஜராயா, ட்விட்டரில் பகிர்ந்தார். அதில், 'மராத்திய ராப்ரி தேவி' என குறிப்பிட்டிருந்தார்.
பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக பொறுப்பு விகித்தவர் ராப்ரி தேவி. இவர், அம்மாநில முன்னாள் முதல்வர் லாலுவின் மனைவி ஆவார்.
ஜிதேன் கஜராயாவின் பதிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அதை அவர் நீக்கினார். இது தொடர்பாக, அவருக்கு மும்பை காவல்துறையின் சைபர் குற்ற பிரிவு சம்மன் அனுப்பியது. இதையடுத்து, பிகேசி சைபர் காவல்நிலையத்திற்கு சென்ற அவர், தனது சர்ச்சைக்குரிய பதிவு குறித்து விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், ஜிதேன் கஜராயாவை கடுமையாக விமரிசித்துள்ள மும்பை மேயரும் சிவசேனை கட்சியின் நிர்வாகியுமான கிஷோரி பெட்னேகர், "அரசியலில் பாஜகவை வளர்த்துவிட்டவர் சிவசேனை கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே. அவரது மறுமகள் குறித்தே பாஜக இழிவான கருத்துகளை தெரிவித்துள்ளது.
யார் இந்த ஜிதேன் கஜராயா? தேசியவாத காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு கங்காரு போல தாவி, இன்று மகாராஷ்டிரா பெண்களை பற்றியும் ராஷ்மியை பற்றியும் இப்படி கீழ்த்தரமான கருத்துக்களை கூறி வருகிறார். பால் தாக்கரேவின் மருமகள், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி, ஆதித்யா தாக்கரேவின் தாயார் என நமக்குத் தெரிந்த ரஷ்மியின் பெயரை இழுத்ததற்கு என்ன காரணம்?
பால் தாக்கரேதானே பாஜகவின் கையைப் பிடித்து அரசியலில் பெரிய ஆளாக்கிவிட்டார். இன்றைக்கு அவருடைய மருமகள் மீதே தகாத வார்த்தைகளை பேசி வருகிறார்கள். இவ்வளவு பெருமை எங்கிருந்து வந்தது? எதுவாக இருந்தாலும் இந்த கஜாரியா நம் முன் வந்தால் சிவசேனாவின் மகளர் அணி அவரை பார்த்து கொள்ளும் என்று சவால் விடுகிறேன்" என்றார்.