பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிப். 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. இதில், பஞ்சாப் மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரேகட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிப்ரவரி 16 ஆம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப் மக்கள் வாராணசிக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம் என்பதால் வேறு தேதியில் வாக்குப் பதிவு நடத்த வேண்டும் எனகாங்கிரஸ், பாஜக, பஞ்சாப் லோக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது.
இதையடுத்து, கட்சிகளின் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிப். 20 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பிப். 1 - வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்; வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப். 2 ஆம் தேதி நடைபெறும்; வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் பிப். 4 என்றும் வாக்குப்பதிவு பிப். 20 ஆம் தேதியும் வாக்குகள் எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 5 மாநில தோ்தல் தேதி அறிவிப்பு