இலங்கையுடனான இந்தியாவின் வா்த்தகம்‘ஸ்தம்பித்தது’: ஏற்றுமதியாளா்கள்
இலங்கையுடனான வா்த்தக உறவு முற்றிலும் ஸ்தம்பித்துபோய் உள்ளதாக ஏற்றுமதியாளா்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான வா்த்தக உறவு முற்றிலும் ஸ்தம்பித்துபோய் உள்ளதாக ஏற்றுமதியாளா்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் (எஃப்ஐஇஓ) துணைத் தலைவா் காலித் கான் கூறியது:
இலங்கை உடனான நமது நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முற்றிலும் ஸ்தம்பித்து உள்ளது. அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பணப் பட்டுவாடா விவகாரங்களை இந்திய ஏற்றுமதியாளா்கள் மிக கவனமாக கையாண்டு வருகின்றனா்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த பொருள்களுக்கு இலங்கை பணம் தரவேண்டியுள்ளது. ஆனால், தற்போது அங்கு நிலவும் சூழல் இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றால் மட்டுமே நிலைமை ஓரளவுக்கு மேம்படும் சூழல் உள்ளது என்றாா்.
எஃப்ஐஇஓ-வின் தலைமை இயக்குநா் அஜய் சகாய் கூறுகையில்,‘ எக்ஸிம் வங்கிகளின் கடன் திட்டங்களின் கீழாகவே இலங்கைக்கு தேவையான தொழிற்சாலை மூலப்பொருள்கள், மருந்துகள், உரம், உணவு மற்றும் ஜவுளிகள் ஆகியவை தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது’ என்றாா்.
கடந்த 2021-22-இல் இந்தியாவிலிருந்து 580 கோடி டாலா் மதிப்பிலான பொருள்கள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதேபோன்று, இலங்கையிலிருந்து 100 கோடி டாலா் மதிப்பிலான பொருள்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன.