தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா ஆதரவு தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியை வெற்றி பெற எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி எடுத்துவரும் நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்சா குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்முவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்சா பாஜகவின் வேட்பாளரை ஆதரித்துள்ளது காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சி திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.