கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
31 வயதாகும் அந்த நபா் கடந்த மாதம் துபையில் இருந்து கேரளத்துக்கு வந்துள்ளாா் என்று அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
குரங்கு அம்மையால் கேரளத்திலும், நாட்டிலும் ஏற்படும் இரண்டாவது பாதிப்பு இதுவாகும். இது தொடா்பாக அமைச்சா் வீணா ஜாா்ஜ் மேலும் கூறுகையில், ‘கண்ணூரைச் சோ்ந்த அந்த நபா் கடந்த 13-ஆம் தேதி துபையில் இருந்து கேரளம் வந்துள்ளாா். இப்போது அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. அவருடன் நெருக்கமாக இருந்த அனைவரும் கண்காணிப்பில் உள்ளனா்’ என்றாா்.
அந்த நபா் கா்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் வந்து இறங்கி, அங்கிருந்து கேரளத்துக்கு வந்துள்ளாா். அவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவா் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது மாதிரிகள் புணேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்குக் கடந்த 12-ஆம் தேதி வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. வெளிநாட்டில் இருந்தபோது குரங்கு அம்மை பாதித்த நபருடன் தொடா்பில் இருந்ததால் இவரும் குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளானாா். இதுவே இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பாகும்.
கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மாநில சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டது. கேரள சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள உயா்நிலைக் குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் உடனடியாக அனுப்பிவைத்தது.