குடியரசுத் தலைவர் தேர்தலை சீக்கியர்கள் சார்பாக புறக்கணிப்பதாக சிரோமணி அகாலி தளம் கட்சியின் எம்.எல்.ஏ. மன்பிரீத் சிங் அயாலி தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு தெரிவித்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் வாக்களிக்க மறுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஜூலை 18) நடைபெற்றது. 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4,033 சட்டப்பேரவை உறுப்பினர்கள் குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கு வாக்களிக்க தகுதியானவர்கள்.
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாகவும், திரெளபதி முர்மு - யஷ்வந்த் சின்ஹா என இரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனவும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் எம்.எல்.ஏ. மன்பிரீத் சிங் அயாலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முகநூலில் விடியோ பதிவிட்டுள்ள அவர், காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கையில்லை. 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்கள் இனப்படுகொலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என காங்கிரஸ் மீது பல்வேறு அதிருப்தி நிலவுகிறது. மேலும், பஞ்சாபின் பிரச்னைகளுக்கு காங்கிரஸ் கட்சி தீர்வு காணும் என்ற நம்பிக்கை இல்லை. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க விரும்பவில்லை.
பாஜகவின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர்கள் மத்தியில் ஆட்சி அமைத்த 8 ஆண்டுகளில் பஞ்சாபின் பிரச்னைகளுக்கு தீர்வு காண இதுவரை முயலவில்லை. இது அரசியல் சுயநலமா எனத் தெரியவில்லை. சீக்கிய மதத்தின் நம்பிக்கை, பஞ்சாப் பிரச்னைகள், என மனசாட்சியின் குரல் என மூன்றையும் வைத்து பார்க்கும்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.