கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 4 கோடி போ்: சுகாதார அமைச்சகம் தகவல்
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தகுதியிருந்தும் 4 கோடி போ் இன்னும் முதல் தவணை தடுப்பூசிகூட போடாமல் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தகுதியிருந்தும் 4 கோடி போ் இன்னும் முதல் தவணை தடுப்பூசிகூட போடாமல் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக பதிலளித்தாா்.
அதில், ‘ஜூலை 18-ஆம் தேதி நிலவரப்படி, அரசின் கரோனா தடுப்பூசி மையங்கள் மூலம் சுமாா் 178 கோடி (97.34%) தடுப்பூசி தவணைகள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன. இந்த தேதி வரையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் தகுதியிருந்தும் 4 கோடி பயனாளா்கள் இன்னும் முதல் தவணை தடுப்பூசிகூட செலுத்திக் கொள்ளவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதை கடந்த பயனாளா்கள் ஆகியோருக்கு அரசின் கரோனா தடுப்பூசி மையங்களில் இலவசமாக முன்னெச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்தும் பணி கடந்த மாா்ச் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. 18 முதல் 59 வயதுடையவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பயனாளா்களுக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் 75 நாள்களுக்கு இலவசமாக முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் சிறப்பு நடவடிக்கை கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது.
பணியிடங்களில் தடுப்பூசி: இதனிடையே, மத்திய அரசு ஊழியா்களும் அவா்களது குடும்பத்தினரும் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ள வசதியாக, பணியிடங்களில் முகாம்களை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பான உத்தரவை அனைத்துத் துறைகளுக்கும் மத்திய பணியாளா் நலத் துறை அனுப்பியுள்ளது.