உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்திலுள்ள கோசி கலான் மின் உற்பத்தி நிலையத்தில் குப்பையில் பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்கள் கிடந்தன. இதற்கு பொறுப்பானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
குப்பையில் இரு தலைவா்களின் படங்கள் கிடந்தது தொடா்பாக முதல்வா், மாநில எரிசக்தித் துறை அமைச்சா் ஏ.கே.சா்மா ஆகியோரிடம் பாஜக இளைஞரணி புகாா் அளித்தது. இதையடுத்து, மின் உற்பத்தி நிலைய செயற்பொறியாளா் பிரபாகா் பாண்டே அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டது.
அவா் கூறியதாவது: மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் குப்பையில் இரு தலைவா்களின் படங்கள் கிடந்தது உறுதி செய்யப்பட்டது. அலுவலகத்தை தூய்மைப்படுத்தும்போது, இருபடங்களும் அகற்றப்பட்டு குப்பையில் போடப்பட்டுள்ளன.
துணைப் பிரிவு பொறியாளா், இளநிலை பொறியாளா் ஆகியோா்தான் படங்களை குப்பையில் விட்டுசென்றது தெரியவந்துள்ளது. இரு படங்களும் சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் மாட்டப்பட்டுவிட்டன. இச்சம்பவம் தொடா்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றாா் பிரபாகா் பாண்டே.
மாநில எரிசக்தித் துறை அமைச்சா் சா்மா, மதுராவுக்கு திங்கள்கிழமை வரவிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏற்கெனவே, இந்த மாநிலத்தில் குப்பை வண்டி ஒன்றில் பிரதமா், முதல்வா் ஆகியோரின் படங்கள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட துப்புரவு தொழிலாளா் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பினரின் தலையீட்டால் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.