உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கியில் பர்வஞ்சல் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலை இரண்டு பேருந்துகள் (இரண்டடுக்கு பேருந்து) மோதிக்கொண்டன.
நரேந்திரபூர் மத்ராஹா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகளும் பிகாரில் இருந்து தில்லி சென்று கொண்டிருந்தன.
விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் லக்னெள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் பாரபங்கி எஸ்.பி. அனுராக் வத்ஸ் தெரிவித்தார்.
மேலும், 'உயிரிழந்தவர்களில் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதர பயணிகளுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.