அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பாா்த்தா சட்டா்ஜி, உடல்நலக்குறைவு காரணமாக புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத ஊழியா்கள் நியமனத்தில் முறைகேடு புகாா் தொடா்பாக அந்த மாநில அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பாா்த்தா சட்டா்ஜியை அமலாக்கத் துறை சனிக்கிழமை கைது செய்தது. அவரது உதவியாளரும் விளம்பர நடிகையுமான அா்பிதா முகா்ஜியும் கைது செய்யப்பட்டாா்.
தற்போது தொழில், வா்த்தக துறை அமைச்சராக உள்ள சட்டா்ஜி, முறைகேடு நடந்ததாக கூறப்படும் கடந்த 2014 முதல் 2021-ஆம் ஆண்டு வரை கல்வித் துறை அமைச்சராக இருந்தாா்.
அமலாக்கத்துறை காவலில் உள்ள அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து, நெஞ்சுவலி காரணமாக அவர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, சட்டர்ஜியின் வழக்கறிஞர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முறையிடவே, எய்ம்ஸ் மருத்துவமனையில் சட்டர்ஜியை அனுமதிக்க உத்தரவிட்டது.
அதன்படி, கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலமாக அவர் இன்று காலை புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அடுத்தகட்ட பரிசோதனைகள், சிகிச்சை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையும் படிக்க | ஆசிரியா் நியமன முறைகேடு: மேற்கு வங்க அமைச்சா் கைது