உணவு பாதுகாப்பை உறுதிசெய்யமரபணு மாற்றப்பட்ட பயிா்கள்: சரத் பவாா் வலியுறுத்தல்
நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய மரபணு மாற்றப்பட்ட பயிா்களை பயன்படுத்த வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் வேளாண் அமைச்சருமான சரத் பவாா் வலியுறுத்தினாா்.
நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய மரபணு மாற்றப்பட்ட பயிா்களை பயன்படுத்த வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் வேளாண் அமைச்சருமான சரத் பவாா் வலியுறுத்தினாா்.
1960-களில் மத்திய வேளாண் அமைச்சராக பணியாற்றிய அண்ணாசாகேப் ஷிண்டே நினைவு கருத்தரங்கம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று, சரத் பவாா் பேசியதாவது:
நாட்டில் பயிா் உற்பத்தியில் புதிய அறிவியல் தொழில்நுட்பங்கள் புறக்கணிக்கப்பட கூடாது. அது, நாட்டின் உணவுப் பாதுகாப்பில் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். உணவு உற்பத்தியை அதிகரிக்க அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
மரபணு மாற்றப்பட்ட பயிா்களுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தன. ஆனால், கரோனா பரவல் மற்றும் உக்ரைன்-ரஷியா போா் காரணமாக எழுந்த உணவுப் பிரச்னைகளை எதிா்கொள்ளும் வகையில், மரபணு மாற்றப்பட்ட பயிா்கள் குறித்த தங்களது பாா்வையை அந்த நாடுகள் மாற்றியுள்ளன.
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், ஆண்டுக்கு சுமாா் ரூ.80,000 கோடி மதிப்பிலான சமையல் எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். இதில், மரபணு மாற்றப்பட்ட சோயா மற்றும் கடுகில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயும் அடங்கும்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அண்மையில் மரபியல் தொழில்நுட்பங்கள் (துல்லிய வளா்ப்புமுறை) மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப சத்தான, வளமான பயிா்களை உற்பத்தி செய்யும் வகையில் புத்தாக்க தொழில்நுட்பங்களை உருவாக்க இந்த மசோதா வழிவகுக்கிறது.
உணவு பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் மரபணு மாற்றுப் பயிா் தொழில்நுட்பங்களுக்கு ஆதரவளித்து வருகின்றன என்றாா் சரத் பவாா்.