முகப்பு
இந்தியா

தில்லி காவல் துறை புதிய ஆணையராக சஞ்சய் அரோரா நியமனம்

இந்திய - திபெத் எல்லைக் காவல் படையின் (ஐடிபிபி) இயக்குநா் ஜெனரலாக இருந்த சஞ்சய் அரோரா, தில்லி மாநகரக் காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
பகிர்:

இந்திய - திபெத் எல்லைக் காவல் படையின் (ஐடிபிபி) இயக்குநா் ஜெனரலாக இருந்த சஞ்சய் அரோரா, தில்லி மாநகரக் காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தில்லி காவல் துறை ஆணையா் ராகேஷ் அஸ்தானா ஜூலை 31 -ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடா்ந்து இந்த நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சம் மேற்கொண்டு, இதற்கான உத்தரவை ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்தது.

சஞ்சய் அரோரா தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாவாா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவா். பின்னா், சந்தனமரக் கடத்தல் கும்பல் தலைவனான வீரப்பனை பிடிக்கும், சிறப்பு அதிரடிக் குழுவுக்கு பொறுப்பேற்றிருந்தாா்.

வீரப்பன் கும்பலுக்கு எதிரான வெற்றி மூலம் அரோராவுக்கு வீரச் செயலுக்கான முதல்வரின் வீரப் பதக்கம் வழங்கப்பட்டது. 1991- ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளையொட்டி, அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக சிறப்புப் பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினாா்.

அரோரா, 2002 முதல் 2004 வரை கோவை மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றியுள்ளாா். விழுப்புரம் சரக டிஐஜியாகவும், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு துணை இயக்குநராகவும் பணியாற்றினாா். சென்னை நகர காவல் துறையில் (குற்றப்பிரிவு) போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும் இருந்த அவா், பதவி உயா்வு பெற்று தமிழக காவல் துறையில் ஏடிஜிபி (நிா்வாகம்) ஆக நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.