கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவரது தோழி பாத்திமா நூரா. இருவரும் சவூதி அரேபியாவில் படித்தபோது சந்திக்கொண்டனர். நாளடைவில் இருவருக்குள்ளான நட்பு தன்பாலின ஈர்ப்பாக மாறியது.
இருவரது குடும்பத்தினரும் சவூதியில் வேலை பார்த்து வந்ததால் இவர்களுக்கு இடையான உறவைத் தெரிந்துகொண்ட உறவினர்கள் பாத்திமா நூராவை கேரளத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பாத்திமாவுடன் சேர்ந்து வாழ முடிவு செய்திருந்த ஆதிலா கேரள உயர்நீதிமன்றதில் பாத்திமாவை அவளது உறவினர்கள் அடித்துத் துன்புறுத்தி கொண்டு சென்றுவிட்டதாகவும், அவளைக் காணவில்லை எனக் கூறி ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், பாத்திமா நூராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டதோடு மனுதாரர் ஆதிலா நஸ்ரினும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்றத்தில் பாத்திமா நூரா மற்றும் ஆதிலா நஸ்ரின் இருவரது வாதங்களையும் கேட்ட நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு தடை இல்லை என அறிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய பாத்திமா நூரா “இத்தனை நாள்கள் எங்கள் வீடுகளில் கடுமையான மன அழுத்தத்தைச் சந்தித்தோம். இப்போது உண்மையிலேயே அற்புதமாக உணர்கிறோம்” எனத் தெரிவித்தார்.