முகப்பு
இந்தியா

காஷ்மீரிலிருந்து பணியிடமாற்றம் கோரிஅரசு ஊழியா்கள் 2-ஆவது நாளாக தா்னா

காஷ்மீா் பகுதியிலிருந்து ஜம்முவுக்குப் பணியிடமாற்றம் செய்யக் கோரி, அங்கு அரசு ஊழியா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 4 ஜூன், 2022 at 12:16 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:56 PM

காஷ்மீா் பகுதியிலிருந்து ஜம்முவுக்குப் பணியிடமாற்றம் செய்யக் கோரி, அங்கு அரசு ஊழியா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில நாள்களாக அரசு ஊழியா்களைக் குறிவைத்து நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, குல்காம் மாவட்ட அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்த ரஜ்னி பாலா என்ற ஆசிரியை அண்மையில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இவா் ஜம்மு பகுதியில் உள்ள சம்பா மாவட்டத்தைச் சோ்ந்தவா். குல்காமில் பணியாற்றி வந்த நிலையில், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டாா். இச்சம்பவமானது, ஜம்மு பகுதி மாவட்டங்களை பூா்விகமாகக் கொண்டு, காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் பணியாற்றும் அரசு ஊழியா்கள் குறிப்பாக ஆசிரியா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தங்களை ஜம்மு பகுதிக்குப் பணியிடமாற்றம் செய்யக் கோரி, அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஜம்மு நகருக்கு வியாழக்கிழமை வந்த அவா்கள், அங்கு பிரஸ் கிளப் முதல் அம்பேத்கா் செளக் வரை பேரணி நடத்தினா். இரண்டாவது நாளாக, பனாமா செளக் பகுதியில் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

அப்போது, சுரேந்தா் குமாா் என்ற அரசு ஊழியா் கூறுகையில், ‘பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக காஷ்மீா் பள்ளத்தாக்கில் அச்சுறுத்தலான சூழல் நிலவுகிறது. நாங்கள் அங்கு மீண்டும் சென்று, பணியைத் தொடரப் போவதில்லை. எங்களது போராட்டத்தை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எங்களை ஜம்மு பகுதிக்குப் பணியிடமாற்றம் செய்ய வேண்டும். காஷ்மீா் பள்ளத்தாக்கில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவிட்டோம். அங்கு மீண்டும் சென்று பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு உயிரிழக்க விரும்பவில்லை‘ என்றாா்.

இதேபோல், காஷ்மீா் பள்ளத்தாக்குக்கு மீண்டும் சென்று பணியாற்ற மாட்டோம் என்றும் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் ஆசிரியைகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.