நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ஜூன் 13-இல் ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன்
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கு குறித்து விசாரிக்கக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை ஜூன் 13-ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கு குறித்து விசாரிக்கக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை ஜூன் 13-ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஆஸ்கா் ஃபொ்னாண்டஸ் உள்ளிட்டோரால் யங் இந்தியன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை நடத்தி வருகிறது. தற்போது யங் இந்தியன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரா்களாக சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோா் உள்ளனா். அந்த நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக விசாரிக்க ஜூன் 2-ஆம் தேதி ராகுல் காந்தியையும், ஜூன் 8-ஆம் தேதி சோனியா காந்தியையும் ஆஜராகுமாறு அண்மையில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
எனினும் தான் வெளிநாட்டில் இருப்பதால் வேறு தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு ராகுல் காந்தி கோரியிருந்தாா். அதன் அடிப்படையில், தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் ஜூன் 13-ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது என்று அந்தத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.