புது தில்லி: நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கு குறித்து விசாரிக்கக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை ஜூன் 13-ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இதையடுத்து ஜூன் 13 ஆம் தேதி காலை அமலாக்கத்துறை முன்பு ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். சுமார் மூன்று மணி நேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து அவர் வெளியே வந்தார். பிற்பகலுடன் விசாரணை நிறைவு பெற்றதாக அப்போது கருதப்பட்டது. எனினும் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து நடைபெற்ற அமலாக்கத் துறையினரின் விசாரணை நேற்று இரவு 9.30 மணி வரை நடைபெற்றது. சுமார் 8 மணி நேரம் ராகுல் காந்தியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை நேற்று 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் இன்று (ஜூன் 14) ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.