கேரளத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிலால் சாமத் கண்ணை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.பி.மேத்திவ் தாக்கப்பட்டதைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸை சேர்ந்த தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழா பகுதியில் கடந்த வாரம் நடத்திய போராட்டத்தை காவலர்கள் தடுக்க முயன்றனர். அப்போது காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் படுகாயமடைந்தனர். இடுக்கி இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிலால் சாமத், கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு எர்ணாகுளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், காயம் ஏற்பட்டுள்ள அவரது வலது கண் முழுவதுமாக செயலிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது கண்ணில் 20 தையல்கள் போடப்பட்டிருந்ததாகவும் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.டி.சதீஷன், போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிபிஎம் தொண்டர்களும் காவலர்களுடன் இணைந்து காங்கிரஸ் தொண்டர்களை தாக்கினர். ஆளும் கட்சியின் து போன்ற ஒடுக்குமுறையை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கே காவல் துறைக்கு மூன்று நாள்கள் தேவைப்பட்டுள்ளது. காவல் துறையினர் கட்சித் தொண்டர்களைப் போன்று செயல்படுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
மேலும், பிலால் சாமத் மருத்துவ செலவு முழுவதையும் காங்கிரஸ் கட்சியே ஏற்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.