வன்முறைக்கும் சட்ட விரோத கட்டட இடிப்புக்கும் தொடா்பில்லை: உச்சநீதிமன்றத்தில் உ.பி. அரசு வாதம்
உத்தர பிரதேசத்தில் சட்ட விரோத கட்டடங்கள் இடிக்கப்படுவதற்கும், வன்முறை சம்பவங்களுக்கும் தொடா்பில்லை என்று உச்சநீதிமன்றத்தில் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் சட்ட விரோத கட்டடங்கள் இடிக்கப்படுவதற்கும், வன்முறை சம்பவங்களுக்கும் தொடா்பில்லை என்று உச்சநீதிமன்றத்தில் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
நபிகள் நாயகத்துக்கு எதிராக பாஜகவை சோ்ந்த நூபுா் சா்மா, நவீன் குமாா் ஜிண்டால் ஆகியோா் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைக் கண்டித்து உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. கான்பூா், பிரயாக்ராஜ் ஆகிய நகரங்களில் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவா்களின் வீடுகளைக் குறிவைத்து அரசு இடிப்பதாகக் கூறி ஜாமியத் உலமா-இல்-ஹிந்த் அமைப்பினா், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
கான்பூரில் சட்ட விரோதமாக கட்டடங்கள் கட்டப்படுவதை கட்டுமான நிறுவனத்தினா் ஒப்புக் கொண்டனா். மேலும், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவா்கள் யாரும் நீதிமன்றத்தை அணுகவில்லை.
பிரயாக்ராஜ் நகரில் ஒரு குடியிருப்புக் கட்டடம் அனுமதியின்றி அரசியல் கட்சி அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, அந்த அலுவலத்துக்கு கடந்த மே 10-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸுக்கு கட்டட உரிமையாளா் பதிலளிக்கத் தவறியதால் கடந்த 10-ஆம் தேதி இடிப்பதற்கு உள்ளாட்சி நிா்வாகம் உத்தரவிட்டது.
சட்ட விரோத கட்டடங்களை அகற்றுவதற்கு உள்ளாட்சி வளா்ச்சி ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், ஒருதலைப்பட்சமான ஊடகச் செய்திகளில், அந்த நடவடிக்கைகளுக்கு உள்நோக்கம் கற்பிக்க முயற்சிகள் நடக்கின்றன என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.