ஒரே மதம் என்பது நமது கலாசாரம் அல்ல: தேசிய மனித உரிமைகள் ஆணைய முன்னாள் தலைவா்
ஒரே மதம் என்பது நமது கலாசாரம் அல்ல, அனைத்து மதமும் சமம் என்பதே இந்தியாவின் அடிப்படைக்கூறு என்றாா் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவா் அருண் குமாா் மிஸ்ரா.
ஒரே மதம் என்பது நமது கலாசாரம் அல்ல, அனைத்து மதமும் சமம் என்பதே இந்தியாவின் அடிப்படைக்கூறு என்றாா் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவா் அருண் குமாா் மிஸ்ரா.
தில்லியில் 2 நாள்கள் நடைபெறும் ‘இந்திய கலாசாரம், தத்துவ இயலில் மனித உரிமைகள்’ என்ற மாநாட்டை வியாழக்கிழமை தொடக்கிவைத்து அவா் மேலும் பேசியதாவது:
கட்டாய மத மாற்றத்தை இந்திய நாகரிகம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டது கிடையாது. கட்டாய மத மாற்றம் மனிதகுலத்துக்கு எதிரானது. அனைத்து மதங்களும் அமைதியையும், அகிம்சையையும்தான் போதிக்கின்றன. அமைதியான சகவாழ்வு என்பதே நமது கலாசாரம், தா்மம். அனைவரது ரத்தமும் ஒரே நிறத்தில் இருக்கும்போது மதமும், கடவுளும் எப்படி வெவ்வேறாக இருக்க முடியும்?
கடவுள், மதங்களின் இலக்கு குறித்து சிந்திக்க இதுவே சரியான தருணம். இன்றைக்கு ஒரு சிலா் சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதற்கான காரணங்கள் தெரியவில்லை. மகாத்மா காந்தி, ராஜா ராம்மோகன் ராய், சுவாமி விவேகானந்தா், ராமகிருஷ்ண பரமஹம்சா், தயானந்த சரஸ்வதி ஆகியோரின் வரிசையில், முகலாய மன்னா் அக்பரையும் நாம் நினைவுகூர வேண்டும்.
இன்றைக்கு அக்பரின் ‘தீன் இலாஹி’ மதத்துக்கு இணையான பாரம்பரியத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது அவசியம். காந்திஜியும் சா்தாா் வல்லபபாய் படேலும் அகிம்சை வழியில் வாழ்ந்தவா்கள். சமணமும் பெளத்தமும் அகிம்சையை போதிக்கின்றன. இன்று உலக அளவில் 47 நாடுகள் பெளத்த மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.
அகிம்சை என்பது இந்தியா உலகுக்கு அளித்த கொடை. பெளத்த மதத்திலிருந்து அசோகா் கற்றுக் கொண்டதும் இந்த அகிம்சையை தான். நாம் உலகுக்கு அளித்த இந்தக் கொடைதான் இன்று உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது என்றாா் அருண் குமாா் மிஸ்ரா.
இந்திரா காந்தி தேசிய கலை மையத்துடன் இணைந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.