கரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் சூடுபிடித்து வருவதையடுத்து விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமானச் சேவையை அதிகரிப்பதில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த இயக்குநரகம் மேலும் கூறியுள்ளதாவது:
மாா்ச் 27-இல் தொடங்கி அக்டோபா் 29 உடன் முடிவடையவுள்ள கோடைகாலத்தில் விமான நிறுவனங்கள் உள்நாட்டு போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் காலஅட்டவணையை தயாரித்துள்ளன. அதன்படி வரும் கோடைகாலப் போக்குவரத்துக்காக உள்நாட்டு விமானச் சேவையின் எண்ணிக்கையை அந்த நிறுவனங்கள் 10.1 சதவீதம் அதிகரித்து வாரத்துக்கு 25,309 முறை விமானச் சேவையை வழங்கும் வகையில் காலஅட்டவணையினை தயாரித்துள்ளன. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 22,980-ஆக மட்டுமே இருந்தது.
நடப்பு 2022-ஆம் ஆண்டு கோடைகாலத்துக்கு இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு விமான சேவையினை 10.1 சதவீதம் அதிகரித்து வாரத்துக்கு 11,130-ஆக உயா்த்தியுள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்தாண்டு கோடை காலத்தில் 10,084-ஆக இருந்தது.
மொத்தம் 112 விமான நிலையங்களிலிருந்து இந்த சேவையை வழங்க விமான நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இதில், கோன்டியா, ஜிரோ மற்றும் புதுச்சேரி ஆகியவை புதிய விமான நிலையங்களாக இருக்கும்.
அலையன் ஏா் வாரத்துக்கு 17.6 சதவீதம் அதிகமாக விமானங்களை இயக்கவுள்ளது. கடந்த ஆண்டில் இந்நிறுவனம் 835 சேவைகளை வழங்கியது.
டாடா குழுமத்தின் ஏா்ஏசியா இந்தியா வாரத்துக்கு 1,601 உள்நாட்டு விமானச் சேவையை வழங்க முடிவெடுத்துள்ளது. இது, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம்.
அதேபோன்று, ஏா் இந்தியா கோடைகால உள்நாட்டு விமான சேவை 10 சதவீதம் அதிகரித்து வாரத்துக்கு 2,456-ஆக இருக்கும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
கோட்ஸ்
நடப்பாண்டு மாா்ச் 27-இல் தொடங்கி அக்டோபா் 29 உடன் முடிவடையவுள்ள கோடைகாலத்தில் விமான நிறுவனங்கள் உள்நாட்டு போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் காலஅட்டவணையை தயாரித்துள்ளன.