தில்லியிலிருந்து இன்று காலை தோஹா நோக்கி புறப்பட்ட விமானம் கராச்சியில் அவசரமாக தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியிலிருந்து 100 பயணிகளுடன் இன்று காலை கத்தார் தலைநகர் தோஹா நோக்கி கத்தார் ஏர்வேஸின் விமானமான க்யூஆர்579 புறப்பட்டுள்ளது. நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
“இன்று காலை தில்லியிலிருந்து தோஹா சென்ற விமானத்தில் சரக்குப் பகுதியிலிருந்து புகை கிளம்பியதால் கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டன.
அவசரகால சேவைகள் பின்பற்றப்பட்டு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. மேலும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர் பயணிகள் அனைவரும் தோஹா நோக்கி புறப்படுவார்கள். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.