குஜராத்தில் கட்சியின் முதல் முக்கிய நிகழ்வாக அகமதாபாத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி சாலைப் பேரணி நடத்த ஆம் ஆத்மி கட்சித் திட்டமிட்டுள்ளது.
இந்த பேரணியில் தில்லி, பஞ்சாப் முதல்வர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கேஜரிவால் மற்றும் பகவந்த் மான் இணைந்து பாபுநகர்பகுதி, தக்கர்நகர், ஜீவன்வாடி, நிகோல் போன்ற பகுதிகளில் ஏப்ரல் 2ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை சாலைப் பேரணி நடத்த உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் இசுதன் காத்வி தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் அவர் தெரிவித்தது,
இந்த சாலைப் பேரணியைத் தொடர்ந்து, சில வாரங்களுக்குப் பிறகு சௌராஷ்டிரா பிராந்தியத்தில் மற்றுமொரு சாலைப் பேரணியை நிகழ்த்த உள்ளனர். மேலும், 2022 தேர்தலையொட்டி கேஜரிவால் அவ்வப்போது மாநிலத்திற்கு வருவார் என்று அவர் தெரிவித்தார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முழு வீச்சில் போட்டியிடும். பஞ்சாபில் நாங்கள் செய்தது போல் குஜராத்தில் சுனாமியை மாநிலம் சந்திக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்துத்துவா என்ற பெயரிலும், காங்கிரஸை மக்கள் விரும்பாத காரணத்தாலும் பாஜக நகர்ப்புறங்களில் ஓட்டுகளைப் பெறுகிறது. மாநிலத்தில் எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்றார்.