புது தில்லி: நாட்டில் காசநோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பின்னுக்குத் தள்ளி, கரோனா காலத்துக்குப் பிறகு 25 - 30 சதவீதம் அளவுக்கு காசநோயாளிகள் அதிகரித்திருப்பதாக குறிப்பாக காசநோய் பாதித்த இளைஞர்கள் அதிகரித்திருப்பதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
காசநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மார்ச் 24ஆம் தேதி உலக காசநோய் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், குணப்படுத்தக் கூடிய ஆனால், உலகளவில் பல லட்சக் கணக்கானோரை காசநோய் பாதித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகளவில் இருக்கும் ஒட்டுமொத்த காசநோயாளிகளில் 27 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதும், ஆண்டு தோறும் புதிதாக 26 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
காசநோய் சிகிச்சை மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் போன்ற நடவடிக்கைகள் கரோனா பேரிடர் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருநத்ன. இதனால், நாட்டில் காசநோய் பாதிப்புகளும், காசநோயால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காசநோய்க்கு உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 5-7 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் இது கரோனாவுக்கு முன்பு 1 - 2 சதவீதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.